
ஜனாதிபதியுடன் இணைந்து ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமாயின், ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப்பேச்சு வார்த்தைகளை நடத்தியது.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நியாயமற்ற வரிச்சூத்திரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அரச வருவாயைவிட அதிக வருவாயைப் பெறும் இந்த நியாயமற்ற வரி சூத்திரத்தை மக்கள் ஆணை மூலம் மாற்றியமைப்போம் என கூறினோம்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த வரிச்சூத்திரத்தை மாற்றும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
எனவே ஜனாதிபதி கூறியதை போல பேச்சில் மாத்திரமல்லாது நடைமுறையிலும் செயற்பட வேண்டும்.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கைகோர்த்து, இந்த இணக்கப்பாட்டை மாற்றியமைக்கும் செயல்முறைக்கு ஆதரவை வழங்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


