மட்டு. களுதாவளையில் மனைவியை கொலை செய்த சந்தேக நபர் மூதூரில் சடலமாக மீட்பு
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் -தோப்பூர் பகுதியைச் சேர்ந்த கந்தவனம் சசிகுமார் (வயது 48) என தெரியவருகின்றது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள – களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் களுதாவளையில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூருக்கு வந்து தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த உயிர் இழப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
அதேவேளை சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு பொலிஸார் வருகை தந்து தடயியல் பரிசோதனை செய்தனர்.அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டு. களுதாவளையில் அடி காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
