இந்துக் கல்லூரி மாணவி விபத்தில் பலி

டிப்பர் மோதியதில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பரிதாபமாக உயரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது -17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

குறித்த மாணவி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டு இருந்தவேளை, ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் குறித்த மாணவி மீது மோதி, டிப்பரின் பின் சில் மாணவியின் மீது ஏறியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு அவர் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.