சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு திராய்மடுவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு – திராய்மடு சிமர்னா திருச்சபையின் தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 10 கிராமங்களை உள்ளடக்கிய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற 5 வயது தொடக்கம் பல்கலைக்கழகம் செல்லும் வரைக்குமான சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கி அவர்களின் அறிவாற்றல், சமூக ரீதியான ஆற்றல், உடல் ரீதியான ஆற்றல் மற்றும் ஆன்மீக ரீதியான ஆற்றல் என்பவற்றில் சிறந்தவர்களாக மாற்றும் நோக்கிலேயே இத்திட்டமானது அமையப் பெறவுள்ளது.

இத் திட்டமானது சிறார்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

146 சிறுவர்கள் இத் திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்காகப் 18 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கெம்பஸ்ஷன் நிறுவனமானது இத்திட்டத்தின் அனுசரனையாளர்களாக செயற்படுகின்றதுடன், சிமர்னா திருச்சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைமைப் போதகர் எஸ்.ஜே.சில்வெஸ்டார், கெம்பஸ்ஷன் நிறுவனத்தின் பிரதிநிதி கஜாந்தன், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஜெகநாதன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரி, சுகாதாரப் பணிமனையின் உயரதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிதிகள் சிறார்களின் பாண்டு வாத்திய இசை முழங்க மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன், சிறார்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வரவேற்புரை, தலைமையுரை என்பவற்றினைத் தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்