மட்டு. ஏறாவூரில் மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காண்பித்த அதிபர் கைது

-பதுளை நிருபர்-

10 வயது பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காண்பித்த ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் பாடசாலை சிறார்களுக்கு மேலதிக வகுப்பு நடத்துவதாக கூறி ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலைக்கு 6 சிறார்களை வரவழைத்து சிறார்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை காண்பித்ததாக சிறார்கள் அவர்களது பெற்றோர்களிடம் கூறி பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல மறுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பெற்றோர் பாடசாலைக்கு சென்று குறித்த அதிபரை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பின்னர் ஏறாவூர் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்