
போதையில் வைத்தியர்: வைத்தியசாலையில் இளைஞன்
கல்முனை பகுதியில் நேற்று சனிக்கிழமை போதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குடிபோதையில் இருந்த மருத்துவர் நேற்று இரவு வெள்ளை நிற காரில் விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச்சென்று வைத்தியசாலை வளாகத்தில் காரை தரித்து வைத்த நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் கார் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காரை செலுத்தி சென்ற வைத்தியர் கைது செய்யப்பட்டு பொலிஸார் வாக்கு மூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்