கடத்தப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு

சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று திங்கட்கிழமை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து அவர்களின் நிலைமைகள் தொடர்பிலும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

கடந்த ஜனவரி 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து லொரென்சோ புத்தா-04 எனும் ஆழ்கடல் மீன்பிடிப்படகில் கடற்றொழில் மேற்கொள்வதற்காக 06 இலங்கை மீனவர்கள் புறப்பட்டனர்

இந்நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச கடற்பரப்பில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் குறித்த 6 இலங்கை மீனவர்களும் கடத்தப்பட்டனர்.

கரையில் இருந்து 1,160 கடல் மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து காணாமல் போன படகு தொடர்பில் தேடிப்பார்க்குமாறு இலங்கை கடற்படையினர் பஹ்ரைனில் அமைந்துள்ள 40 நாடுகளை உள்ளடக்கிய கூட்டு கடல் படையணிக்கு அறிவித்தனர்.

அதன்படி ஜனவரி 29 ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட ‘லோரன்சோ புத்தா 04’  எனும் பலநாள் மீன்பிடிப் படகு சீஷெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்தது

குறித்த படகில் பயணித்த 6 இலங்கை மீனவர்களும் மீட்கப்பட்டதோடு,  3 கடற் கொள்ளையர்களை சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்ததாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது.

எனினும், மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 6 பேரும் இன்னும் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்