காணி கொள்கைகளை திணித்து எதிர்காலத்தில் வாழ வழியில்லாமல் செய்வதே அரசின் நோக்கம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணி தொடர்பாகக் கொண்டிருக்கும் கொள்கை நடைமுறையினால் காணி எனும் பொது வளம் நிரந்தரமாக இந்தப் பூமியில் வாழ்பவர்களின் மற்றும் எதிர்கால சந்ததியின் நன்மைக்காக பயன்படுத்துவது தொடர்பான பாரிய பிரச்சினையை ஏற்படுத்தம் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய காணிச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கலந்துரையாடல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சந்துன் துடுகல தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலுமிருந்தும் காணி தொடர்பாக பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகப் பிரதிகள் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தலைமையில் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நிகழ்வில் விவரிக்கப்பட்டது.

இது தொடர்பாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்,

“தோல்வியடைந்த காணிக் கொள்கைகளைத் திணித்து மனிதர்களும் மற்ற உயிரினங்களும் வாழ வழியில்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அரசாங்கத்தின் கீழிருக்கும் காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாமை அரசாங்கத்தின் தோல்வியாகும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தனியார் நிறுவனங்களுக்குக் காணிகளை வழங்குவது தீர்வாகாது.

இந்நாட்டு மக்களின் பொது வளமான காணியை தமது குறுகிய தூரநோக்கற்ற இயலாமையை மறைப்பதற்காகவும் தமது நண்பர்களின் இலாபத்திற்காகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் நிதி ஆதாயங்களுக்காகவும் பலியிடலே இது தொடர்பான நடவடிக்கைகள் ஊடாக இடம்பெறுகிறது.

இந்த நடைமுறைகளை நியாயப்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் வாதங்கள் புதிதானவைகள் அல்ல. அவை இந்த நாட்டிலும் உலகின் பல இடங்களில் பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுத் தோல்வி அடைந்தவைகள். அதனால், காலம் கடந்த இத்தகைய தோல்வியுற்ற உபாயங்களை கைவிடுமாறும் அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்படப்பபோகும் பாதிப்புக்களை மீண்டும் சரிசெய்ய முடியாத அழிவிற்பு வழியமைப்பதைத் தடுக்குமாறும் காணிகள் தொடர்பான மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.

அரச காணி முகாமைத்துவம் அரசிடமிருந்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் மீன்பிடி நிலங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்படுகின்றன.” என்றும் தெரிவிக்கப்பட்டது.