திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு

-கிண்ணியா நிருபர்-

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு இன்றையதினம் சனிக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பொன்.சற்சிவானந்தம் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான திருமலை சுந்தா, கவிஞர் ஷெல்லிதாசன், கவிமணி அம்.கௌரிதாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், தொடக்கவுரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் க.யோகானந்தம் வழங்கியிருந்தார்.

பிரதம ஆசிரியர் உரையினை வாசல் கவிதை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன் ஆற்றியிருந்ததுடன், ஈழத்து கவிதை சிற்றிதழ்களின் வரிசையில் வாசல் சஞ்சிகை என்ற தலைப்பில் கவிஞர் தி.பவித்ரன் விசேட உரையாற்றினார்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான திருமலை சுந்தா, கவிஞர் ஷெல்லிதாசன், கவிமணி அம்.கௌரிதாசன் ஆகியோர் ‘கலைக்கேசரி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.