
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய் கிழமை கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவாக விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை ரூ 17,500 வரை அதிகரிப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபா வரை 5,000 ரூபாவால் அதிகரிப்பதற்கும் மற்றும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
