
மட்டக்களப்பில் செந்தில் தொண்டமான் தலைமையில் மகளிர் தின நிகழ்வு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மகளிர் தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான இவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிறப்பு அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் மட்டக்களப்பில் கல்வி துறையில் சாதித்த பெண்கள், கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் இதன் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அலிசாஹீர் மௌலானா, ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மகளீர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



