
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: வியாழேந்திரன்
நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு வாக்களித்தது தொடர்பாகவும் இந்த சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிகழ் நிலைச் சட்டத்தில் ஏற்கனவே இருந்த இணையவழி குற்றங்கள் உள்ளிட்ட சரத்துக்களை உள்ளடக்கி இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ் நிலைச் சட்டத்தின் ஊடாக உண்மையாக, செயற்படுகின்ற ஊடகவியலாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கள் மறுக்கப்படக் கூடாது அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஜனநாயகத்திற்கு முரணாக தனி மனித சுதந்திரத்தை அவருடைய கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என தெரிவித்தார்.
