3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விஞ்ஞான ஆசிரியர் கைது

மூன்று பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வட்டவளை தமிழ் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 10 ஆம் வகுப்பு பாடசாலை மாணவிகள் மூவருக்கும் குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்பி அவர்களை பாலியல் உறவுகளுக்கு தூண்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் இவரது குறுஞ்செய்திகளை தடுத்து நிறுத்தியபோது, குறித்த ஆசிரியர் அவர்களை கவர்ந்திழுக்க அவர்களின் நாற்காலிகளில் பாலியல் தொடர்பான செய்திகளை எழுதியுள்ளதாக தெரியவருகின்றது.

44 வயதான குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன கமகே தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.