பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு வழங்கலும் சாதனை மாணவர்களை கௌரவித்தலும்

-உமர் அறபாத் – ஏறாவூர்-

மட்டக்களப்பு ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு வழங்கலும் தேசியத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான கோடிங் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்த ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலை மண்டபத்தில் தலைவர் எம்.எல்.ஏ. அப்துல் லத்தீப் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக கூட்டுறவு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலிஷாஹிர் மௌலானா அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான என்.மதிவண்ணன் அவர்களும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் மற்றும் ஏறாவூர் நகரசபையின் விஷேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு பங்களிப்புக்களை வழங்குகின்ற பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் உலர் உணவுப் பொருட்களும் இதன் போது வழங்கப்பட்டது .

கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு தேசியத்தில் சிறந்து விளங்கும் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துடன் பணியாற்றி ஏ.ப.நோ.சங்கத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் தலைவர் ,எம்.எல்.ஏ.லத்தீப் அவர்களுக்கு விஷேட கௌரவிப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மேலும் வர்த்தக கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் நாட்டின் பொருளாதார நிலைப்பாடு பற்றியும் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார் .