
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “மேன் ஒஃப் ஈஸ்ட்” பட்டம் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
சமத்துவ பொங்கல் விழா நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி “மேன் ஒஃப் ஈஸ்ட்” என்ற பட்டத்தை ஆளுநருக்கு வழங்கி வைத்துள்ளனர்.
தமிழர் பேரவை, மக்கள் மறுமலர்ச்சி மன்றம், பசுமை இல்லம், புதிய உதயம், பெண்கள் உதவி அறக்கட்டளை ஆர்.ஐ. அசௌசியேசன் திருக்கோணமலை மாவட்ட வணிக சங்கங்கள் உட்பட ஏனைய பல அமைப்புகள் இணைந்து “மேன் ஒஃப் ஈஸ்ட்” என்ற பட்டத்தை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலை திட்டங்களை 5 மாத காலக்கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக் காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.


