கிழக்கின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்

 

25 வருட கிழக்கு மாகாண சபை வரலாற்றில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தைக் கொண்ட நஜீப் அப்துல் மஜீத் தனது 66 ஆவது வயதில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சற்று முன் காலமானார்.

நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட நஜீப் அப்துல் மஜீத் 1994 இல் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து தபால் தொலைதொடர்பு பிரதி அமைச்சராக – திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக , கூட்டுறவு அமைச்சராக , இருந்து பின்னர் 2012 செப்டம்பர் தொடக்கம் 2015 வரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தை தன்னகத்தே கொண்டார்.

இவரது தந்தையாகிய முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக இருந்து பெரும் பணிகளை சமூகத்தின்பால் நின்று ஆற்றிய அப்துல் மஜீத் இன் மரணத்தை தொடர்ந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து பல்வேறு பணிகளை ஆற்றி வந்தார்.

நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30மணியளவில் அவரது சொந்த ஊரான திருகோணமலை – கிண்ணியாவில் இடம்பெறும் .