
நாடு முழுவதும் மின் தடை : என்ன நடந்தது?
நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். மாலை 5:15 மணியளவில் கொத்மலை – பியகம மின்விநியோகப் பாதையில் கணனி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க கிட்டத்தட்ட 7 மணிநேரம் ஆனது.
கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக பாதையில் மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் இருவேறு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
