
காத்தான்குடி சிறுவனின் மரணம் : மௌலவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான மௌலவி மீராஸாகீபு முகமட் சனாஸ் (வயது-41) என்பவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். குறித்த பெண்ணும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கினை பார்வையிட தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தார்.
சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை முன்னுக்கு பின் முரணாக வழங்கிய மௌலவி, இறுதியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு உடற்பரசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்
தடுத்து வைக்கப்பட்டிருந்த மௌலவி அடிக்கடி புன்முறுவலுடன் காணப்பட்டதால், கைவிலங்கு இடப்பட்டு விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்தனர். இதனால் கண்கலங்கிய அவர் தொடர்ச்சியாக மலம், சலம் கழிப்பதற்கு பொலிஸாரை தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபராக மௌலவியின் சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகவில்லை. இருந்த போதிலும் அதற்கான முயற்சிகளை மௌலவியின் சகோதரர் மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சந்தேக நபரான மௌவியின் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் சிசிடிவி கமராக்களை பொருத்தியவர்களின்பால் கவனம் சென்றது.
உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அட்டாளைச்சேனையில் மறைந்திருந்த சிசிடிவி கமரா பொருத்திய நபர் மற்றும் அவரது உதவியாளர்கள் 3 பேரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தது.
இதன் போது தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவரிடமும் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் காணாமல் சென்ற முக்கிய ஆதாரங்களை அழிக்கப்பட்ட நிலையில் வன்பொருள் சேமிப்பகத்தை கைப்பற்றி நீதிமன்ற சான்று பொருளாக மன்றில் ஒப்படைத்ததுடன் அரச பகுப்பாய்விற்காக அழிக்கப்பட்ட காணொளிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மத்ரஸா பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களிடையே சமூக பிறழ்வு பழக்கவழக்கங்கள் காணப்பட்டதாகவும் சில வேளை மௌலவியும் அதற்கு உடந்தையாக செயற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
