இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 13 குழந்தைகள் மலேசியாவில்

இலங்கையிலிருந்து 13 குழந்தைகள் மலேசியாவிற்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணையில் இவ்வாறு ஒரு தகவல் தெரியவந்துள்ளது.

மலேசியா ஊடாக இலங்கை குழந்தைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.