
“தேவதை கதைகளால் எந்தப் பயனும் இல்லை” – நாமல் ராஜபக்ஷ
2024 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகள் முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியநாமல் ராஜபக்ஷ, முன்னைய முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை, எனவே அரசாங்கம் அதனை மீண்டும் முன்வைத்துள்ளது.
இரண்டு தடவைகள் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இந்த ஆண்டு பட்ஜெட் என்பது வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும், பட்ஜெட் அறிவிப்பாக இருக்குமா என்று காத்திருக்கிறோம், பிரேரணைகளை ஆராய்ந்த பின்னர் பாராளுமன்ற விவாதத்தின் போது எமது கருத்துக்களை முன்வைப்போம், ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா என்று பார்ப்போம், என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் கொள்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், “தேவதை கதைகள் நடைமுறையில் வேலை செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.
