உதவி பூசகரான 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூஜை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெற இருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலுக்கு மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பகுதியைச் சேர்ந்த திருச்செல்வன் லுகநாத் (14 வயது) எனவும் தெரிய வருகிறது.

உயிரிழந்த சிறுவனின்  சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.