மன்னாரின் இயற்கை வளங்கள் விற்பனை : 70 ஆயிரம் மக்களின் நிலை என்ன?

 

மன்னாரின் இயற்கை வளங்கள் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் 70 ஆயிரம் மக்களின் எதிர்கால நிலை தொடர்பில் அரசியல்வாதிகள் அக்கறையின்றி செயல்படுவதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் செயலாளர் ஆலம் குற்றம் சாட்டுகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் இடம் பெற்ற மீனவ சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களான சூரிய சக்தி, கடல்வளம், நிலம் என்பன அபிவிருத்தி என்ற போர்வையில் அந்நிய நாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எமது மன்னார் மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து கீழ் இறங்கிக் காணப்படுவதால் கடல் அரிப்பின் காரணமாக சில வேளைகளில் எமது மாவட்டம் வரைபடத்திலிருந்து காணாமல் போகக்கூடிய அபாயம் ஏற்படலாம்.

ஏனெனில் அபிவிருத்தி என்ற போர்வையில் மிகப்பெரிய காற்றாலை திட்டம் ஒன்றை அதானி குழுமம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்காக நிலத்தில் பாரிய துளைகள் இடப்படவுள்ளது.

அது மட்டுமல்லாது தற்போது புதிய கடற்தொழில் சட்டம் என்ற போர்வையில் வெளிநாட்டு படகுகளை எமது பிரதேசத்தில் கடத்தொழில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக எமது மாவட்டத்தில் உள்ள 70 ஆயிரம் குடும்பங்களில் 90 விதமான குடும்பங்கள் கடற்தொழிலையே நம்பி வாழ்கின்ற நிலையில் அவர்களின் நிலை தொடர்பில் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.

வடக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது தேவையற்ற விடயங்களில் இனவாதத்தை பேசுவதும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காது.

ஆகவே மன்னார் மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அக்கறையோடு செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.