
கிழக்கின் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியீடு
தென்கிழக்கு பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியையும் ஸ்தாபகர் தினத்தையும் முன்னிட்டு கடந்த 2023.10.23 ஆம் திகதி திங்கட்கிழமை மரநடுகை நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் ஓர் அங்கமாக பேராசிரியர் ஏ.எல் அப்துல் றவூப் எழுதிய “இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆய்வு நூல்” (Exploratory Studies on micro small and medium enterprises in eastern province of Sri Lanka) பல்கலைக்கழக வணிக மையத்தின் (UBL) ஏற்பாட்டில் 2023.10.25 ஆம் திகதி புதன்கிழமை தொழில்நுட்ப பீட கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்க்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிரேஷ்ட சிவில் நிர்வாக சேவை அதிகாரி எல்.பி. மதநாயக்க கலந்து கொண்டிருந்தார். ஆளுநரின் செய்தியை திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரும் ஆளுநரின் மேலதிக செயளாலருமான ஏ.எஸ்.எம் பயாஸ் வாசித்தார்.
பேராசிரியர் ஏ.எல் அப்துல் றவூப் வரவேற்புரையை தொடர்ந்து நூல் விமர்சன உரையை பேராசிரியர் எம்.பி.எம். இஸ்மாயில், பல்கலைக்கழக வணிக மையம் தொடர்பில் கலாநிதி எம்.என்.ஏ. ஹினாஸ் நிகழ்த்தினர். நிகழ்வுக்கு விஷேட பேச்சாளராகவும் விஷேட அதிதியாகவும் பேராசிரியர் துசித அபேதுங்க கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட அதேவேளை நூலின் பிரதிகளை அதிதிகளுக்கும் கௌரவமாக அழைக்கப்பட்டவர்களுக்கும் வழங்கிவைத்துடன் ஜி.எஸ்.லாணி மௌஸ்டீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பீடாதிபதிகள்இ பேராசிரியர்கள், பதிவாளர், நிதியாளர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், பிரதி திட்டமிடல் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தனியார் துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

