சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இதற்கான சட்டமூலம் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்துள்ளார்.
நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தமது காதல் உறவில் விரிசல் ஏற்பட்டதன் பின்னர், ஏனையோர் அவற்றைப் பார்க்கும் வகையில், சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக பிடிபட்ட ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பிடிப்படும் நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரட்டிப்பாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.