மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி – இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து இன்று ஞாயிற்று கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மிட்வெஸ்ட் கெவி சான்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
வழங்கிய அனுமதிக்கு முரணாக மணல் அகழப்படுவதால் கடற்கரையை அண்டி இருக்கின்ற கிராமங்கள் கடலுக்குள் உள்வாங்கப்படுகின்ற அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் மூலம் மக்களில் வாழ்வாதாரத்தை சுடண்டி தனியார் இலாபம் சம்பாதிப்பதாகவும் எதிர்கால சந்ததிக்கான இயற்கை வளம் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கருத்துக்களை தெரிவித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.