மட்டக்களப்பில் வீட்டுக் கூரையை உடைத்து நகைகள் திருட்டு: 4 இளைஞர்கள் கைது
மட்டக்களப்பு காத்தானகுடி, டீன் வீதியில் வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைத் திருடிய 4 இளைஞர்களைக் காப்புத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுயப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த 23, 19, 17, 19 ஆகிய வயதுடைய நான்கு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கொழும்புக்குச் சென்றிருப்பதை அறிந்த திருடர்கள் வீட்டின் கூரை மீது ஏறி கூரையை உடைத்து உள்ளே இறங்கி அலுமாரியை உடைத்து 2 செயின், 2 பெண்டன், 1 காப்பு சோடி, 3 மோதிரம், 2 மின்னித் தோடுகள் மற்றும் 2000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது திருடப்பட்ட நகைகளை மூதூரிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ள நிலையில் அக்கடையிலிருந்து நகைகள் மீட்கப்பட்டதுடன் நகை கடை உரிமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.