வாகன விபத்தில் இந்துக்கல்லூரி மாணவன் பலி
-யாழ் நிருபர்-
யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதி, கைதடி நுணாவில் வைரவ கோவிலடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாட்டுவண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த சிவபாலன் பிரவீன் (வயது-19) என்ற மாணவனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
