
அந்த வேலைக்கு சஜித் சரிப்பட்டுவரமாட்டார் – சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு
ஜனாதிபதியாகச் செயல்படுவதற்கு சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவாரோ என எனக்கு தெரியாது ஆனால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேலைக்கு சரி வர மாட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது கட்சியில் இருந்தவர்களே கால்களை வாரியதுடன் மீண்டும் அவர்களை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக அறிகிறேன்.
ரணில் விக்கிரமசிங்க பெரமுன கட்சியின் ஆதரவு கிடைத்தமையால் ஜனாதிபதியானார்.
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு என்னையும் தமிழ் கட்சிகள் அழைத்தார்கள் வெற்றி பெற்ற முதலமைச்சரானேன்.
ஆனால் என்னை அழைத்தவர்களே எனது கால்களை இழுக்கப் பார்த்தார்கள், தப்பிவிட்டேன். ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
