அளவுக்கு அதிகமான ஹெரோயின் பாவனையால் இளைஞன் மரணம்

 

 

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் (27 வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்று வியாழக்கிழமை உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அவருடன் சேர்ந்து உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்த  இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை நேற்று  2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

அவர் ஹெரோயினை பாவித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார், அத்துடன் அதிக ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.