திருகோணமலையில் கடற்கரை மற்றும் பவளப் பாறைகள் சுத்திகரிக்கும் நிகழ்வு

-திருகோணமலை நிருபர்-

 

திருகோணமலை நகரை அண்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதனால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்  திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள கடற்கரை மற்றும் கடலுக்குள் கற்பாறைகளில் படிந்து காணப்படுகின்ற வலைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான பணியில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம்,  திருகோணமலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சுழியோடிகள் அமைப்பு அனைவரும் கூட்டாக இணைந்து கடலுக்குள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.