மகனின் படிப்பிற்கு பணம் இல்லை : நிவாரணம் கிடைக்கும் என உயிரிழந்த தாய்

தனது மகனின் கல்லூரி கட்டணத்தை‌ செலுத்த பணமில்லாமல் விபத்தில் இறந்தால் நிவாரணம் கிடைக்கும் என தாய் ஒருவர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா-சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (46). சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கணவரை இழந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த மாதம் 28ம் தேதி,  2வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பொலிஸர் அப்பகுதி சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பவம் நடப்பதற்கு முன்னதாக பாப்பாத்தி டவுன் பகுதியில் இருந்து சென்ற பேருந்தில் விழுவதற்காக ஓடி சென்றுள்ளார்.

அப்போது திடீரென குறுக்கே வந்த பைக் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து சென்று 2வதாக வந்த பேருந்தின் முன்பாக விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை வழக்காக விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதாவது, மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார். மகன் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கான கட்டணம் ரூ.45 ஆயிரத்தை செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த பணத்தை பாப்பாத்தியால் கட்ட முடியவில்லை.

இதற்காக அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் கடன் கேட்டுள்ளார். கணவனை இழந்த அவரை நம்பி கடன் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும். மேலும் மகனின் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் வேலையும் மகனுக்கு கிடைக்கும் என்ற சிந்தனை வந்துள்ளது.

இதையடுத்து ஓடும் பேருந்தில் பாய்ந்து பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மகனின் கல்லூரி வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட கூடாது என்பதற்காக தன்னுயிரையே தாய் மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.