கடிதங்கள் முச்சக்கர வண்டிகள் மூலம் விநியோகம்

23
தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தபால் விநியோகத்திற்காக நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்படும் மிதிவண்டிகளுக்கு பதிலாக, முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படும் எனவும் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்கும் இறுதி இலக்குடன் தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடையும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தபால் சேவையை நவீனமயமாக்கும் பணியை அரசு – தனியார் துறை கூட்டு முயற்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தபால் துறையை எந்த வகையிலும் தனியார் மயமாக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தபால் திணைக்களத்திற்கு 4000 மில்லியன் ரூபாவால் நட்டம் குறைக்கப்படும் என அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு இந்த அமைச்சை வழங்கிய போது தபால் திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் சவாலை என்னிடம் ஒப்படைத்தார்.
2022 ஆம் ஆண்டில் தபால் சேவையின் வருமானம் ரூ. 7,000 மில்லியன் ஆகவும் செலவானது ரூ.14,000 மில்லியனாகவும் இருந்தது. உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தபால் திணைக்களத்தின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை ரூ. 7,000 மில்லியன் முதல் 4,000 மில்லியன் வரை கொண்டுவந்துள்ளோம். அஞ்சல் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.

2025 ஆம் ஆண்டில், திறைசேரியை நம்பியிருக்காத தபால் திணைக்களத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்” என இராஜாங்க அமைச்சர் பண்டார மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath