
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் சிறுவர்களது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு மற்றும் பாதுகாப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் ஊழியம், போதைவஸ்து, வீதியோர யாசகம் மற்றும் வியாபாரம் உட்பட சிறுவர் அச்சுறுத்தல் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அத்தோடு பிரதேச மட்ட சிறுவர் அவிருத்தி குழுவில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படாத விடயங்களும், மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவில் முன்வைத்து தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் இங்கு கருத்துப் பரிமாறப்பட்டன.
இந் நிகழ்வில் 14 பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணியக மனநல வைத்திய நிபுணர் வைத்தியர் டான், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், சிறுவர் மகளிர் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள், உளவியல் சமூக அலுவலர் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அலுவலர்கள், தன்னார்வுத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட துறைசார் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

