ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் அபாயம்!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை  விரைவில் மறுசீரமைக்கத் தவறினால்  அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள்  தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும்  மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்குஇ சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.

மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.