
ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீளுருவாக்கம் செய்ய திட்டம்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஒட்டி சுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீள் உருவாக்கம் செய்து குறித்த தொழிற்சாலையினை மீள இயங்க வைப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட்ட நிபுணத்துவ குழு நேற்று செவ்வாய்க்கிழமை ஒட்டி சுட்டான் ஓட்டு தொழிற்சாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,
அரசியலை தாண்டி எமது இளைஞர் யுவதிகளது வேலைவாய்ப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த பிரதேச மக்கள் இந்த ஓட்டு தொழிற்சாலை இயங்குவதன் மூலம் தமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றார்கள்.
இதனடிப்படையில் 3 இயந்திரவியல் பொறியியலாளர்கள், 1 குடிசார் பொறியிலாளர், ஒட்டிசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உட்பட நிபுணத்துவ குழுவுடன் அங்கு சென்று கலந்துரையாடிய நிலையில் அரசாங்க கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படுகின்ற நிலையில் இதற்கான சாத்தியகூற்று அறிக்கை ஒன்றை வரைந்து கைத்தொழில் அமைச்சருடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
பாரிய செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை மிகவும் எளிதாக இதனை இயங்க வைக்க முடியும்
இதன் மூலம் வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்பிற்கும் பாரிய பங்களிப்பினை ஏற்படுத்தும், என அவர் மேலும் தெரிவித்தார்.

