எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் போராட்டம்!

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்

பாடசாலைகளுக்கிடையிலான ‘எல்லே’ போட்டிகள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் பாரதி மகா வித்தியாலயா அணியை எதிர்த்து முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மோதியது.

வித்தியானந்தா முப்பது பந்துகளில் 4 ரன்களும் பாரதி மகா வித்தியாலயம் 10 பந்துகளில் நான்கு ரன்களையும் அடித்தது.

எமது வெற்றியை பறிப்பதற்காக வீரர் ஒருவர் பச்சை குத்தியுள்ளார் என்பதை காரணம் காட்டி குறித்த போட்டியிலிருந்து எமது பாடசாலையை அணியை விலத்தினர்.

நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பங்கு பற்றிய நிலையில் பச்சை குத்தியதை அவதானிக்காதவர்கள் அரை இறுதி போட்டியில் மட்டும் அதனை காரணமாக காட்டியது ஏன்?

எமது பாடசாலை அணியின் வெற்றியை நீக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த செயற்பாடு இடம் பெற்றதாக நாம் கருதுகிறோம்.

எமது போராட்டம் காலையிலிருந்து 12 மணி வரை இடம்பெற்ற நிலையில் எமது கோரிக்கைகளை கேட்பதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டினர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

மாணவன் பச்சை குத்திய காரணத்தினால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே போட்டிகளில் குறித்த அணி பங்கு பற்றிய நிலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கண்டுகொள்ளாதது தவறு என கூறியதுடன் எழுத்து மூல முறைப்பாடு கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.