
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி!
டுபாயில் சொக்கலட் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு கைதுசெய்துள்ளது.
தம்பதி ஒன்றின் மூலம் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக ஒருவரிடம் தலா 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 7 பேரிடம் அவர்கள் பணம் பெற்றுள்ளனர்.
பிரதான சந்தேகநபரான மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் மருதானை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் சேவையாற்றியவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மோசடியுடன் தொடர்புடைய அவரின் கணவரைக் கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
