
சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்!
-மட்டக்களப்பு நிருபர்-
சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரையாக செல்லவுள்ள 1000 பேர் அடங்கிய யாத்திரியர்கள் இன்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தமது பாத யாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.
இப் பாதயாத்திரை குழுவினர் போரூந்து ஊடாக உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்து, நாளை புதன்கிழமை (14) அங்கிருந்து காட்டுவழிப் பாதை ஊடாக பாதயாத்திரையாக திங்கட்கிழமை (19) கதிர்காமத்தை சென்றடையவுள்ளதுடன், கதிர்காம கந்தனின் கொடியேற்றத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஆறு நாட்களை கொண்ட குறித்த காட்டுவழி பாதயாத்திரையின் போது நாளாந்தம் மூன்று வேளையும் 1500 யாத்திரியர்களுக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், குறித்த பாதயாத்திரையின் சகல ஏற்பாடுகளையும் சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் து.ஆதித்தியன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
