மாதவிடாய் கறை: சந்தேகத்தில் 12 வயது தங்கையை அடித்து கொன்ற அண்ணன்

இந்தியாவில், மாதவிடாய் ரத்தக்கறையை தவறாக எண்ணி அண்ணன் சகோதரியை அடித்து கொலை செய்துள்ளார்.

மும்பை, உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித் என்பவர் தனது மனைவி மற்றும் 12 வயது சகோதரியுடன் வசித்து வருகிறார்.

சகோதரியின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்துள்ளது. இதனைக் கண்ட சுமித் எப்படி ரத்தக்கறை வந்தது என கேட்டுள்ளார். ஆனால் அதுகுறித்து அறியாத சிறுமி சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை. 

உடனே, சகோதரி யாருடனோ பாலியல் உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கறை படிந்திருப்பதாக சந்தேகமடைந்த அண்ணன் ஆத்திரத்தில் சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பிறகு உதைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்திருக்கிறார்.

இதில் சிறுமி படுகாயமடைந்தார். அதன்பின் அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆடையில் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகத்தில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்