
துண்டித்த மின்சாரத்தை மீள வழங்க மறந்த மின்சார சபை
ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்க மின்சார சபை மறந்து போனதால் ஒரு கிராமமே இருளில் மூழ்கியிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சாவகச்சேரி மீசாலை வடக்கிலுள்ள ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டும்போது மின் கம்பங்கள் மற்றும் வயர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மின்சாரத்தை துண்டிப்பதற்கான அனுமதி ஆலய நிர்வாகத்தால் பெறப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் சாவகச்சேரி மின்சார சபையால் நேற்று காலை 9.30 மணியளவில் மீசாலை வடக்கு ஊரெல்லைத் தெருவிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மரம் தறித்து முடிந்த பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மின் இணைப்பை மீள வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் மின் இணைப்பு மீள வழங்கப்படவில்லை.
மின்சாரம் வழங்கப்படும் எனக் காத்திருந்து பொறுமையிழந்த கிராம மக்கள் சுன்னாகம் மின் நிலையத்திற்கு பல தடவைகள் அழைப்பெடுத்து முறைப்பாடு செய்தனர்.
இருந்தும் நேற்றிரவு இரவு 7.15 மணியளவிலேயே மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
மின்சார சபையின் அசமந்த போக்கையும், பொறுப்புணர்ச்சியற்ற தன்மையையும் கண்டிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்
