மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்

 

-அம்பாறை நிருபர்-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மருதமுனை வருகை தந்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்தின் அடிப்படையில் மருதமுனை 65 மீற்றர் சுனாமி வீடமைப்பு திட்டத்தினை கையளிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவும் மற்றும் நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கின்ற பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் கழிவு நீர் அகற்றல் பிரச்சினை ஷம்ஸ் மற்றும் அல்மனார் மத்திய கல்லூரிகளில் இடம்பெற்ற விசேட காலாந்துரையாடலிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கலந்து கொண்டார்.

மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டத்தை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உரிய பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது குறித்து – முஷாரப் எம்பியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் – வீடமைப்பு குறித்து, பிரதேச செயலாளரிடம் மேலதிக தகவலை பெற்ற கல்முனை அபிவிருத்தி குழு தலைவரான முஷாரப் எம்பி – அடுத்த ஒரு வார காலத்துக்குள் பயனாளிகளின் பட்டியலை பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.

அதன் அடிப்படையில் – நேற்று மருதமுனைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – 65 மீற்றர் வீடமைப்பு தொகுதிக்கு பிரதேச செயலாளருடன் விஜயம் செய்து – வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார்.

வீட்டுத் திட்டத்தின் நிலைமையை கண்டு ஆச்சரியமடைந்த அவர் – முதலில் உரிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவோம். நாட்டின் பொருளாதார நிலை சீரடைந்ததன் பின்னர் திருத்த வேலைகளை செய்து கொடுப்போம். அதற்கிடையில் – முடியுமானவர்கள் வீடுகளை படிப்படியாக திருத்திக் கொள்ள முடியும். அவர்களுக்கு வீடுகள் சொந்தமானாலே  அவர்கள் தமது வீடுகளை திருத்தம் செய்ய முன்வருவார்கள் என்றார்.

சுனாமி இடம்பெற்று 19 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் – இதுவரை உரிய பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்காமல் இருப்பது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என்று குறிப்பிட்டார்.

மேலும் முஹம்மட் ஷா மற்றும் ஜௌபர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பின் விஜயம் அமைந்திருந்ததுடன் பெரியநீலாவணை – இஸ்லாமிக் ரிலீப் தொடர்மாடி குடியிருப்பு மக்கள் எதிர்கொள்ளும் வடிகால் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டு மக்களுடனும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலியும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்  மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்

மருதமுனை 65 மீற்றர் வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிக்க தீர்மானம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்