
கோட்டைக்கல்லாறு மகா வித்தியால இல்ல விளையாட்டுப்போட்டியில் கம்பர் இல்லம் சம்பியனாகியது
-கல்முனை நிருபர்-
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி அதிபர் கே.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் தனுசியா ராஜசேகர், கணக்காளர் சுதர்சனா சிவகுமார் உதவிக்கல்விப் பணிப்பாளர்களான ரி.இதயகுமார், என்.நேசகஜேந்திரன், எஸ்.சுரேஸ் உட்பட அதிபர்கள், பழைய மாணவர்கள், ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொதுநல அமைப்புக்கள், உத்தியோகத்தர்கள், சமுக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர.;
இங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட கிராமியக் கலைசார்ந்த உடற்பயிற்சி கண்காட்சி அதிதிகள், பொதுமக்கள் அனைவரையும் அதிகம் கவர்ந்த நிகழ்வாக அமைந்திருந்தது.
போட்டிகளின் நிறைவில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் வெற்றிபெற்ற இல்லங்களுக்கான வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு வள்ளுவர், இளங்கோ, கம்பர் ஆகிய இல்லங்களுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கம்பர் இல்லம் முதலாம் இடத்தினையும், இளங்கோ இல்லம் இரண்டாம் இடத்தினையும், வள்ளுவர் இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



