
பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துமாறு போராட்டம்
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலை ஆன்மீக கல்வி கற்பித்தல் நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களிலும் சில பாடசாலைகளிலும் பிரத்தியேகமாக வீடுகளிலும் நடைபெற்று வருவதால் அறநெறிப் பாடசாலைக்கு மாணவர்கள் வருகை குறைவடைந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பிரத்தியேக வகுப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 11 மணி வரை நிறுத்த கோரி மன்னார் இந்து மத பீடத்தின் ஏற்பாட்டில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.
இதன் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துங்கள், இளைய தலைமுறைக்கு ஆன்மீக கல்வி முக்கியம், அறநெறிப் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புகள் வேண்டாம்,ஆன்மீக கல்வியை ஊக்குவிப்போம் ,உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலை ஆன்மீக கல்வி கற்பித்தல் நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களிலும் சில பாடசாலைகளிலும் பிரத்தியேகமாக வீடுகளிலும் நடைபெற்று வருவதால் அறநெறி பாடசாலைக்கு மாணவர்கள் வருகை குறைவடைந்துள்ளது.
அத்தோடு கத்தோலிக்க சமய மறைக்கல்வி, இஸ்லாமிய சமய அஹதிய்யா கல்வி ,பெளத்த சமய தாம் பாடசாலை மாணவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு பிரத்தியேக வகுப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 11 மணி வரை நடாத்துவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு ஆன்மீக கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் என கோரிக்கை விடுத்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று வட மாகாண ஆளுநருக்கு கை யளிக்கும் வகையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேலிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


