
பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த கடற்படை சிப்பாய் திடீரென உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடற்படை வீரரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடற்படை வீரரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை-தியபெதும, அலிகிம்புலாவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.சாலிந்த ரத்னாயக்க (34வயது) எனவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த கடற்படை சிப்பாயின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெற உள்ளதாகவும், முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
