குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்திய யானைகள்

-கிளிநொச்சி நிருபர்-

விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளால் பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் இவ்வாறு அழிவை ஏற்படுத்தியதுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

4 காணிகளில் பயன்தரும் தென்னை மரங்களை அழித்துள்ளதாகவும், வீடுகளில் இருந்த தம்மை அச்சுறுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

என்றும் இல்லாதவாறு இவ்வருடம் தமக்கு யானைகளால் அழிவுகளும், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், பயன் தரக்கூடிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளமையால் தமக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.