
மகா சிவராத்திரி 2023: சிவ பூஜையில் இந்த 5 பொருட்களைப் பயன்படுத்தவே கூடாது
சிவபெருமான் பார்வதியை மணந்த புனித நாள், சிவபெருமான் பக்தர்களின் பக்தியை ஏற்றுக்கொள்ளும் நாள். இருப்பினும், சிவராத்திரி அன்று சிவ பூஜையில் சில பொருட்களை பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன பொருட்கள் என்றும் அதற்கான காரண்ம் என்ன என்றும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகாசிவராத்திரி இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகை. மாசி மாதம் கிருஷ்ண பட்க்ஷ சதுர்தசி அன்று மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் சிவபெருமான் பார்வதியை மணந்ததாக வரலாறு. இம்முறை சிவராத்திரி பெப்ரவரி 18ம் திகதி கொண்டாடப்படுகிறது. அன்று சிவனை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அடையலாம் என்பது நம்பிக்கை. ஆனால் வழிபாட்டின்போது சிவபூஜையில் இந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது..ஏன் தெரியுமா?
பிரம்மனுக்கும், விஷ்ணுக்கும் இடையில் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவிய போது, அடிமுடி காண முடியாதபடி ஜோதி பிழம்பாக மாறி நின்றார் சிவபெருமான். ‘இருவரில் யார் என்னுடைய அடியையோ, முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ? அவரே பெரியவர்’ என்று ஈசன் கூறியதை அடுத்து, பிரம்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு முடியைக் காணவும், விஷ்ணு, வராக வடிவம் கொண்டு அடியைக் காணவும் விரைந்து சென்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இருவராலும் அடியையோ, முடியையோ காண முடியவில்லை. அப்போது பிரம்மதேவன், சிவபெருமானின் தலையில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவிடம், தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே தாழம்பூவும் பொய்சாட்சி கூறியது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் வழிபாடு நடைபெறாது என்றும், தாழம்பூவை என்னுடைய பூஜையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் சாபம் கொடுத்தார்.
சிவலிங்கத்தின் மீது ஏன் துளசி அர்ச்சனை செய்யக்கூடாது? துளசி தன் முற்பிறவியில் அரக்க குடும்பத்தில் பிறந்தாள். விஷ்ணுவின் சிறந்த பக்தை, அவள் பெயர் பிருந்தா. அவள் ஜலந்தர் என்ற அரக்கனை மணந்தாள். ஜலந்தர் தனது மனைவி பக்தியாலும், விஷ்ணுவின் கவசத்தாலும் அழியாத பாக்கியத்தைப் பெற்றார். ஜலந்திரா தேவர்களுடன் போரிட்டவுடன், அவனை முடிக்க சிவனே வரவேண்டும் என்பதால் சிவன் அவரை கொன்றார். கணவன் இறந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்த பிருந்தா கோபமடைந்தார். அங்கிருந்து சிவனுக்கு எதிராகத் திரும்பி துளசியாகப் பிறந்தாள். எனவே துளசி இலைகள் சிவனுக்கு படைக்கூடாது என கூறிவிட்டார்.
சிவலிங்கத்தின் மீது மஞ்சளை ஒருபோதும் பூசக்கூடாது. ஏனெனில் மஞ்சள் ஆதிகாலம் முதலே பெண்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் அதனை சிவபெருமானின் லிங்கத்தின் மீது பூசக்கூடாது.
திருமணமான பெண்கள் குங்குமத்தை புனிதமாக பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தை கொண்டு அவருடைய சின்னத்தை வழிபடுவது புனிதமற்றதாக கருதப்படுகிறது.
சிவபெருமானுக்கு தேங்காய்களை படைத்தாலும், தேங்காய் தண்ணீரை கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யாவாக கருதப்படுவதால், அதனை அதற்கு பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரை கடவுளுக்கு படைத்தால், அதனை கட்டாயமாக பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.
சிவனை வழிபட்டு முக்தி அடைவோம்.
