
வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் காரணமாக முட்டை விற்பனையில் பாரிய இலாபம்
முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருப்தி அளிப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறத் தயார் எனத் தெரிவித்தனர்.
வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாவிற்கும், சிவப்பு முட்டை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன தெரிவித்தார்.
அத்துடன், ஆகஸ்ட் மாதம் நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக சுமார் 25 மில்லியன் முட்டைகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மனுவை மீளப் பெறுவதற்கு மாதிரி வழக்கு கட்டணத்தை நிர்ணயிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றில் கோரினார்.
இந்த மனு மீதான விசாரணை மார்ச் 30ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
