கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா

 

கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை பெக்ஸ் (BECS) கல்லூரியின் ஏற்பாட்டில் அதன் தலைமை பணிப்பாளர் ஏ. கே. முருககுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்பள்ளி ஆசிரிய டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 107 முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை பெக்ஸ் (BECS) கல்லூரி, தேசிய சிறுவர் செயலகம் மற்றும் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு,  மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் ‘கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு வருட கால டிப்ளோமா கற்கை மற்றும் செயன்முறைப் பயிற்சிகளை’ வழங்கி, முன்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கிறது.

இந்நிகழ்வில், அதிதிகளாக முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி. முரளிதரன், மாவட்ட மனிதவள உத்தியோகத்தர்களான மைக்கல் கொலின், தெய்வேந்திர குமாரி, ஓய்வுபெற்ற ஆசிரியர் தட்சணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.