சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்

அகலவத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய  ரஞ்சித் சோமவன்ச இன்று சனிக்கிழமை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

சில காலம், மேல் மாகாண சபையின் சுகாதார, சுதேச மருத்துவ அலுவல்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராகவும், கல்வி, கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர், அக்காலகட்டத்தில் பல குறிப்பிடத்தக்க சிறப்பான பல பணிகளையும் முன்னெடுத்திருந்தார்.

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியான இவர், அக்காலத்தில் முக்கிய ஒரு மாணவர் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக முற்போக்கு மாணவர் முன்னணியின் தலைவராகவும் ஐக்கிய மாணவர் முன்னணியின் தலைவராகவும் பதவி வகித்த இவர், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலில் பிரவேசித்தார்.

1993 ஆம் ஆண்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் மேல் மாகாண சபையின் சபை முதல்வர், பிரதி சபை முதல்வர் உட்பட பல பதவிகளை வகித்து பல தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்ட ஒருவராவார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க