காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இந்திய உதவியை பெற நடவடிக்கை

-கல்முனை நிருபர்-

மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் இந்திய உதவியை பெற ஹரீஸ் எம்.பி நடவடிக்கை : மீனவர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம்

கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த 26.09.2022ம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற மீனவர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50), எம்.என்.ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து மீனவ சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பிலான தற்போதைய நிலைகளை ஆராயும் சந்திப்பொன்று கல்முனை மீனவர் சங்க கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பங்குபற்றலுடன் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.

கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று அவர்களை கண்டுள்ள விடயம் மற்றும் அவர்களின் பயணப்பாதை தொடர்பில் விளக்கிய மீனவர்கள் வடமாகாண கடலில் அந்த மீனவர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், சில நேரங்களில் இந்திய கடல் எல்லையில் அவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா சந்தேகிப்பதாகவும் ஹரீஸ் எம்.பிக்கு விளக்கினர். கடற்படையும், வடமாகாண மீனவ சங்கங்களும், மீனவர்களும் இவர்களை கண்டுபிடிக்க உதவினால் நன்றாக இருக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் மீனவர்கள் ஹரீஸ் எம்.பியை கேட்டுக்கொண்டனர்.

இந்திய, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனியை தொடர்புகொண்டு இந்திய கரையோர பாதுகாப்பு படையின் உதவியை பெற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இது தொடர்பில் மீண்டும் பேச உள்ளதாகவும், இலங்கை கடற்படை, பொலிஸ், கடற்தொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றின் பிரதானிகளை சந்தித்து மீனவர்களை மீட்பதட்கான உச்சகட்ட சக்தியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாவும் மீனவர்களுக்கு உறுதியளித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவரை சந்தித்து இதற்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் பெறவுள்ளதாக தெரிவித்தத்துடன் விரைவில் அவர்களை கரைக்கு அழைத்துவர முழுமையாக இறங்கி வேலைசெய்து வருவதாக அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலளித்தார்.

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP